சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘புலி நகம்’ – நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது

முகலாய தளபதி அஃப்சல் கானை கொல்வதற்கு சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக் நாக்’ எனப்படும் புலி நகம் நாளை லண்டனில் இருந்து இந்தியா கொண்டு வரப்படுகிறது.

கி.பி. 1659-ம் ஆண்டில் பிஜாபூர் சுல்தானின் தளபதியாக இருந்த அஃப்சல் கானை ‘வாக் நாக்’ எனப்படும் புலி நகத்தை பயன்படுத்தி சத்ரபதி சிவாஜி கொன்றதாக கூறப்படுகிறது. அன்று முதல் இந்த புலி நகம், நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த புலி நகத்தை மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் கையெழுத்தானது.

அதன்படி, நாளை இந்த ‘வாக் நாக்’ லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு மகாராஷ்டிராவின் சதாரா நகரத்தில் உள்ள சிவாஜி அருங்காட்சியத்தில் பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டு வைக்கப்பட உள்ளது. இதற்காக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புலிநகத்தை பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் சுதிர் முங்கண்டிவர் தெரிவித்துள்ளார்.