புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதிய விபத்து : பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தஞ்சை வளம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், வளம்பக்குடி அருகில் இன்று காலை சுமார் 7 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்து நடந்துள்ளது.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37) மோகனாம்பாள் (27) மற்றும் மீனா (26) ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் தனலட்சுமி (36) என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட, உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.