டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்விற்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-2 -விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ -விற்கு ஆயிரத்து 820 பணியிடங்களும் என மொத்தமாக 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப்-2, 2 ஏ-விற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலுவலக வேலைநாட்களில் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும். மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது