ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தாக அறிவிக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை எம்பாமிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருமுறை மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியிட நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.