இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28) மற்றும் ராமதாஸ் (52) ஆகிய நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் ஜுன் 17 அன்று கைது செய்யப்பட்டனர்.

இந்த 29 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இவர்கள் 29 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், மீனவர்களின் காவலை ஜூலை 29 வரையிலும் நீட்டித்து உத்திரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.