கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா : மெஸ்ஸி உற்சாகக் கொண்டாட்டம்

நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா.

தென் அமெரிக்க கால்பந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடும். இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் தொடரின் இறுதிப் போட்டி தொடங்க இருந்தது. மைதானத்துக்குள் ரசிகர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் காலை 6.55 மணி அளவில் போட்டி தொடங்கியது. ஆட்டம் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக தொடங்கி இருந்தது.

ஆட்டத்தில் முழு நேரமான 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் கடந்தும் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா தரப்பில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்பட்டது. கோபா அமெரிக்கா தொடரில் இறுதிப் போட்டியில் மட்டும் தான் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்படும். மற்ற அனைத்து போட்டிகளிலும் 90 நிமிடங்கள் வரை மட்டுமே ஆடப்படும். அரையிறுதி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டிகளில் பெனால்டி ஷூட் அவுட் உண்டு.

இந்தச் சூழலில் எக்ஸ்ட்ரா நேரத்தின் முதல் 15 நிமிடங்களில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது 15 நிமிடத்தில் முழு முயற்சியுடன் இரு அணிகளும் போராடின. அதற்கான பலனாக அர்ஜென்டினா அணியின் லாடாரோ மார்டினஸ் கோல் பதிவு செய்தார். இது இந்தத் தொடரில் அவர் பதிவு செய்த 5-வது கோலாக அமைந்தது. அதன் மூலம் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதை அவர் வென்றார்.

120 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் முடிந்த போது 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா இருந்தது. அதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993, 2021, 2024 என 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா. இந்தப் போட்டியின் 66-வது நிமிடத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். அதனால் டக்-அவுட்டில் வருத்தத்தில் மூழ்கி இருந்தார். அந்தச் சூழலில் தனது அணியின் கடைசி நேர கோலை உற்சாகமாக அவர் கொண்டாடி இருந்தார். கோப்பை வென்ற கையுடன் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஓய்வை அறிவித்தார்.

இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 56 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 606 பாஸ்களை மேற்கொண்டது. அதில் 85 சதவிகிதம் துல்லியமானதாக அமைந்தது. 7 கார்னர் வாய்ப்புகள், 19 ஷாட்கள் ஆடி இருந்தது. ஆனபோதும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கைகூடாமல் போனது.