தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்

ஆவணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு டோக்கன்களை பெற வேண்டும். ஒரு சார்-பதிவாளருக்கு தினமும் 100 டோக்கன்கள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முக்கிய முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த 12-ம்தேதி ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ள டோக்கன்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் உயர்த்தப்பட்ட டோக்கன்களை பயன்படுத்தி அன்றைய தினம் 20,310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு, உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பதிவுத்துறை வரலாற்றில் 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.