சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட்டில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அதோடு, நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சோனியா காந்தியை சந்திக்கவில்லை. எனவே, அவரை சந்தித்தேன்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான விவாதங்கள் தொடரும். இந்தியர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள். எவ்வளவு முடியுமோ அதுவரை அவர்கள் பொறுமை காப்பார்கள். அதன்பிறகு, அவர்கள் வாக்கு மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.