“என்னை விடவா அதிகம் பேசிவிட்டார் சாட்டை துரைமுருகன்” – சீமான் கொந்தளிப்பு

“திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்து வன்மத்துடன் செயல்படுகிறார். அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. எங்கள் மீது அவருக்கு வெறுப்பு. ஏற்கெனவே சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது இதே வருண்குமார்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தமிழகத்தில் 31 நாட்களில் 133 கொலைகள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகுதான் மற்ற கொலைகள் வெளியே தெரிகிறது. எல்லோராலும் அறியப்பட்ட தலைவர் கொல்லப்படும்போது தான் தமிழகத்தில் நிலவும் நிலை தெரிகிறது. ஏற்கெனவே கள்ளகுறிச்சியில் இத்தனை பேர் சாராயம் குடித்து இறந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் நேற்று விக்கிரவாண்டியில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாராய அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் சாராயத்தை எப்படி ஒழிக்க முடியும்? இவர்கள் மீது பாயாத சட்டம், மேடையில் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் பாய்கிறது. எதற்காக இந்த அரசு சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது? என்னை விடவா சாட்டை துரைமுருகன் அதிகம் பேசிவிட்டார். அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது ஓர் ஆட்சி முறை.

தமிழர் இன அரசியல் வரலாற்றில் தீய அரசியலின் தொடக்கம் அய்யா கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு தான். பேரறிஞர் அண்ணா வரையிலான அரசியலில் எவ்வளவு நாகரிகம், கண்ணியம் இருந்தது. கருணாநிதி வந்த பிறகு ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுக்கள், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் என்றால் அவரை பற்றி பேசவே கூடாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரை ஸ்டாலின் பேசாததா?.

திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்து வன்மத்துடன் செயல்படுகிறார். அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. எங்கள் மீது அவருக்கு வெறுப்பு. ஏற்கெனவே சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது இதே வருண்குமார்தான். உதயநிதியுடன் இருக்கும் ரத்தீஷ் தான் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, அவர்களுக்கு பணி உயர்வு கொடுப்பது அனைத்தும் செய்கிறார். ரத்தீஷ் தனக்கு நெருக்கமானவர் என்பதால் எஸ்பி வருண்குமார் இவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறார். வேண்டும் என்றால், வருண்குமாரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஆதாரங்களை தருகிறேன்.

பேசுவதற்கு எல்லாம் கைது செய்வதா? எனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக்கேட்கும் அரசுக்கு கள்ளச்சாராயம் விற்பவர்களையும், கொலை குற்றங்களில் ஈடுபடுவதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர். மூன்றாண்டுகள் நல்லாட்சி செய்துள்ளோம் எனக் கூறிவிட்டு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இது ஒரு தேர்தலா?” என்று சீமான் கூறினார்.