சென்னை யானை கவுனி புதிய மேம்பாலத்துக்கு இந்திரா காந்தி பெயர் சூட்ட காங்கிரஸ் கோரிக்கை

சென்னை யானை கவுனி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்திக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த ஜி.கே. மூப்பனார் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்துக்கு அன்னை இந்திரா காந்தியின் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே சென்னை மாநகரில் இந்திரா காந்திக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தாங்கள் இந்த மேம்பாலத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார்.