குன்னூரில் மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி : சோகத்தில் மூழ்கிய காட்டேரி கிராமம்

குன்னுார் காட்டேரி அருகே காணாமல் போன தாயை தேடிச் சென்றபோது, மின்சாரம் தாக்கி தாய் இறந்த இடத்தில், மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹ்ரூன் (71). இவர் கடந்த, 5-ம் தேதி காணாமல் போன நிலையில், பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில், காட்டேரி அருகே புதர்கள் சூழ்ந்த பகுதியில் நேற்று மாலை சிலர் தேடி உள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தாயின் உடலை துாக்கச் சென்ற அவரது மகன், பைரோஸ் கான் (49), மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் மற்றவர்களை நெருங்க விடாமல் தடுத்தனர்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குன்னுார் அரசு மருத்துவமனையில் பெரோஸ் கானை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பைரோஸ் கான் கோவை மாவட்டம் கண்ணப்பன் நகர் பகுதியில் கனரக ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள்; ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே, அதே காட்டேரி பகுதிக்கு தேடுதல் பணிக்கு சென்ற ஆகாஷ் (21) என்பவருக்கும் மின்சாரம் தாக்கியதில், குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் கூறும்போது, ‘இந்த பகுதியில் மின்சார ‘எர்த்’ ஒயர் ஒன்று தொங்கியதில் சிக்கி, மெஹ்ரூன் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து கிடந்தைப் பார்த்த அவரது மகன் பைரோஸ் கான் அலறியடித்து ஓடிப்போய் தாயை துாக்கிய போது, மின்சாரம் தாக்கி அவரும் உயிரிழந்துள்ளார்’ என்றனர். இறந்த இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குன்னுாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.