வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, “கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர், “இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என கூறினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் காவல் துறையினரால் ஒருவரைக் கூட கைது செய்ய முடியாதது ஏன்?” என கேள்வி எழுப்பியதுடன் “மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது” என்றனர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி எஸ்.சத்திய நாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது” என விளக்கமளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் விரைவில் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.