‘ஹாத்ரஸ் சம்பவத்தில் சிறு கைதுகள் மூலம் தோல்வியை மறைக்க உ.பி. அரசு முயற்சி’ – அகிலேஷ் யாதவ்

“உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான ஹாத்ரஸ் சம்பவத்தில் சிறிய கைது நடவடிக்கை மூலம் தனது தோல்வியை மறைக்க அரசு முயற்சிக்கிறது” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அவர், நெரிசல் சம்பவத்துக்கு வழிவகுத்த செயல்களில் இருந்து மாநில அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதால், எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், “ஹாத்ரஸ் சம்பவத்தில் தனது தோல்வியை மறைக்க உத்தரப் பிரதேச அரசு சிறிய கைது நடவடிக்கைகள் மூலம் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்பதில் இருந்து தட்டிக்கழிக்க விரும்புகிறது. இது நடந்தால், இந்த சம்பவத்தில் இருந்து நாம் யாரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரலாம் என்றும் அர்த்தம்.

அரசும், நிர்வாகமும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து விலகி இருந்த மக்களை உள்நோக்கத்துடன் தேவையில்லாமல் கைது செய்து, அவர்களை குற்றவாளிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கைதுகள் ஒரு சதி. இந்த கைதுகள் குறித்து உடனடியாக ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், அதன் மூலம் உத்தரப் பிரதேச பாஜக அரசின் ஆட்டத்தினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று பாஜக அரசு கூறினால் அது ஆட்சியில் தொடர்வதற்கு தகுதி இல்லை. ஹாத்ரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏழைகள், மகிழ்ச்சியை தொலைத்தவர்கள், சுரண்டப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்.

இதுபோன்றவர்கள் மீது பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இது கண்டனத்துக்குரியது. இதுபோன்றவர்களின் மீது அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும்” என அகிலேஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே, உத்தரப் பிரதேச அரசு ஹாத்ரஸ் சம்பவத்தை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தினை கடந்த புதன்கிழமை அமைத்தது.

ஜூலை 2ம் தேதி ஹாத்ரஸில் சூரஜ்பால் என்கிற நாராயண சங்கர் ஹரி என்கிற போலே பாபா என்பவரின் சத்சங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டு குழுவினரில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், ஜுலை 2ம் தேதி 121 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த ஹாத்ரஸ் சம்வத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுக்கர் என்பவரை உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த உபி போலீஸார் அதன் முக்கியக் குற்றவாளியாக தேவ்பிரகாஷ் மதுக்கரை சேர்த்தது. எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் பெயர் சேர்க்கப்படவில்லை.