‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா

ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இதன் விசாரணையில் இறங்கியுள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களும், அதிகாரிகளும் நியாயம் வழங்குவார்கள். நாம் பலியானவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் நலனில் உடன் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர் டாக்டர்.ஏ.பி.சிங் மூலமாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம்.

தற்போதைக்கு அரசின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அனைவரது கடமை. இதற்கான ஆக்கமும், ஊக்கமும் அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார். உபி காவல்துறையின் சாதாரணக் காவலராக இருந்த சூரஜ் பால் ஜாத்தவ், ஒரு பாலியல் வழக்கில் கைதானதால் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தனது சிறை தண்டனைக்குப் பின் விடுதலையானவர் தம் பெயரை நாரயண் சாக்கா விஷ்வ ஹரி என மாற்றிக் கொண்டார்.

தனது சொந்த கிராமமான பட்டியாலாவில் ஆன்மிகப் பிரச்சாரங்களை துவக்கியவரை கிராமவாசிகள் போலே பாபா என அழைக்கத் துவங்கினர். தொடர்ந்து உபி, ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும் அமைத்துக் கொண்டார்.

இவர் கடந்த ஜுலை 2 இல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவின் முகல்கடி கிராமத்தில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் விபத்து நிகழ்ந்தது. இதில், 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின் தலைமறைவான போலே பாபா பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் அளிக்கவில்லை. தற்போது தாம் இருக்கும் இடத்தை குறிப்பிடாமல் செய்து நிறுவனத்திடம் போலே பாபா முதன்முறையாக பேசியுள்ளார்.