“விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்த அனுமதி அவசியம்” – தேமுதிக

“மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும்” என தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி குறிப்பில், “தமிழ்‌ திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும்‌ அன்பான வேண்டுகோள்‌, கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின்‌ (ai technology) மூலம்‌ திரைப்படங்களில்‌ பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள்‌ வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள்‌ ஆடியோ வெளியீட்டு விழாவில்‌ வருகின்றது.

எங்களிடம்‌ முன்‌ அனுமதியில்லாமல்‌ இது மாதிரியான அறிவிப்புகள்‌ வருவதை தவிர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. எந்த விதத்தில்‌ பயன்படுத்துவதாக இருந்தாலும்‌ முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்‌. ஏஐ தொழில்நுட்பத்தின்‌ (ai technology) மூலம்‌ திரைப்படங்களில்‌ பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும்‌ எந்த அனுமதியும்‌ பெறவில்லை என்பதை நாங்கள்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

எனவே அனுமதியில்லாமல்‌ பத்திரிகை செய்திகள்‌, ஊடக செய்திகள்‌, ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில்‌ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.