கேஜ்ரிவால் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஏற்கனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி, இதே வழக்கில் சிபிஐ அவரை கைது செய்தது.

சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கேஜ்ரிவால் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடியவர் அல்ல, அவர் ஒரு பயங்கரவாதியும் அல்ல. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு அவரை சிபிஐ கைது செய்துள்ளது” என கூறினார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங், முதலில் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கேஜ்ரிவால் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட கேஜ்ரிவால், தொடர்ந்து சிறையில் உள்ளார். தேர்தலின்போது, பிரச்சாரத்துக்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.