விழுப்புரத்தில் திமுக கிளைச் செயலாளர் வீட்டில் பரிசுப் பொருட்கள் பதுக்கியதாக பாமகவினர் போராட்டம்

விழுப்புரம் திமுக கிளைச் செயலாளர் வீட்டில் வேட்டி, சட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறிய பாமகவினர் அவரது வீட்டிலிருந்து சில பொருட்களைக் கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காணை ஒன்றியத்துக்குள்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் வீட்டில் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக பாமகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ.,வான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையிலான பாமகவினர், குறிப்பிட்ட திமுக கிளைச் செயலாளர் ராமலிங்கம் வீட்டுச் சென்று அவரது வீட்டுக்குள் இருந்த புதிய சட்டைகள், வேட்டிகள் உள்ளிட்டவற்றை வெளியே தூக்கி வந்து, தெருவில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் இதுகுறித்தெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் பாமகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.