புதுச்சேரியில் ராகுல் படத்தை எரித்து பாஜக போராட்டம் : காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் இந்துக்களை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து புதுச்சேரி பாஜக இளைஞர் அணியினர் ராகுல் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பாஜக மற்றும் இந்துக்கள் அனைவரும் ‘வன்முறையாளர்கள்’ என ராகுல் காந்தி பேசியதாகவும் இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் புதுச்சேரி பாஜக இளைஞர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ராகுல் காந்தியின் உருவப்படத்தை கிழித்தும், தீயிட்டு கொளுத்தியும், உருவப்படத்தை அடித்தும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஓடினர். அப்போது போலீஸார் அவர்களை தடுக்க முற்பட்டதால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. முடிவில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.