3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது : மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கை பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் பொதுமக்கள், மாணவர்கள், கல்வித் துறை வல்லுநர்கள் என பலதரப்பட்டவர்களிடம் கருத்துகளைக் கேட்டு மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை தயார் செய்தது.

இந்நிலையில், இந்தக் குழுவினர் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை தற்போது தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த பரிந்துரை அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே பள்ளிகளில் தொடர வேண்டும்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும், நீட் தேர்வு தேவையற்றது. எனவே அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில கல்விக் கொள்கை அறிக்கை தமிழில் 600 பக்கத்திலும், ஆங்கிலத்தில் 500 பக்கத்திலும் வடிவமைக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.