தமிழக மீனவர்கள் 25 பேர் கைது : இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் மற்றும் அவர்களது 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் செய்ய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். ஏற்கெனவே ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இருந்தனர். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிப்பதோடு, அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு மற்றும் கசசத்தீவு பகுதிகளுக்கு இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர், 4 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தது. பின்னர் மீனவர்கள் அனைவரையும் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றதோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.