இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளில் இனிமையான தருணங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். அவர் இலங்கையில் வாழும் தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவைக்காக தொடர்ந்து பாடுபட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.