பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறப்பு : ஏஐசிடிஇ

பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடீ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத்தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன.

அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2024-25) கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அந்தவகையில் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை பல்கலைக்கழகங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்கவேண்டும். தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேலும், நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.

இது தவிர கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணம் வழங்கப்பட வேண்டும். அதேபோல், முதுநிலை மேலாண்மை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகளும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும், திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி வழிமுறைகளை பின்பற்றி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.