சாலை மோசமாக இருந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது – நிதின் கட்கரி

சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிக்கவே இந்த சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில், “மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தை செலுத்துகிறார்கள். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.