மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா : குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.

முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

அதேபோல் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். வயநாடு தொகுதி காலியாக உள்ளதால், சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற பெரும்பான்மைக்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கைகுலுக்கினர்.