“ராகுல் காந்தியை புதிய பொறுப்புக்கு இந்தியா வரவேற்கிறது” – முதல்வர் ஸ்டாலின்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அக்கட்சி தலைமை அறிவித்தது. இந்நிலையில், அவர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்தியை, புதிய பொறுப்பிற்கு இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்களவையில் தொடர்ந்து வலிமையாக முழங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்திய முந்தைய தருணம் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து ஸ்டாலின் இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன், சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.