கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளது : ஐகோர்ட்டில் தமிழக அரசு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் பலியானது தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை தயாராக உள்ளது. அந்த வழக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்ட்டு இருக்கிறது” என்றார்.

மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு, “கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டு வருகிறது. முதலில் விஷச்சாராயம் குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தவறான அறிவிப்பால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் காவல் துறை உயர் அதிகாரிகள் தொடர்பும் உள்ளது” என்றார். இதையடுத்து, அதிமுக தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளைக்கு விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.