எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு 

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுடுவதும், கைது செய்து கொண்டு செல்வதுமாக தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர். மீனவர்களை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேலையிலும் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஜூன் 22 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களின் மூன்று விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். 22 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீனவர்கள் மீள்வதற்குள் தற்போது மேலும் பத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர்.

இலங்கை கடற்பகுதியில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.