“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு” – ராகுல் காந்தி

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன.

இந்த நிலையில் புதிய சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜ்ஜு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை மட்டுமே உள்ளது. இன்று மனுதாக்கல் செய்யப்பட்டால் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுவரை அனைத்து சபாநாயகர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் சபாநாயகர் தேர்தல் கவனம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிகத் தெளிவாக ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.