கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை தடை செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அமலாக்கத்துறை மறுநாளே (ஜூன் 21) டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது தடைபட்டது. ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தெரிவித்தார்.

மேலும் அவர், “அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த பதிவில் உள்ள உள்ளடக்கத்தை விசாரணை நீதிமன்றம் சரியான முறையில் கவனிக்கவில்லை. இந்த வழக்கில் வாதிட போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவின் வாதத்தை ஏற்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (ஜூன் 26) விசாரணைக்கு வர உள்ளது.