ஜாமீனுக்கு தடை விதித்து கேஜ்ரிவால் மனு மீதான விசாரணையை ஜூன் 26-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. கேஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்திவைத்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் உத்தரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, “டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரட்டும். அதுவரை காத்திருப்போம்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “அமலாக்க இயக்குநரகத்தின் மனு மீது உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஏன் சுதந்திரமாக இருக்கக் கூடாது?” என வாதிட்டார். முதல்வருக்கு சாதகமாக ஜாமீன் உத்தரவு உள்ளது என்றும், அவர் ஒன்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடப் போவதில்லை என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இந்த மனு மீது இப்போது தீர்ப்பு வழங்கினால் அது முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டதாக இருக்கும். ஜாமீனை நிறுத்திவைத்திருப்பது துணை நீதிமன்றம் அல்ல, உயர் நீதிமன்றம்” என்று தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.