“நாடாளுமன்ற கூட்டத்தொடர் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்” – பிரதமர் மோடி

“புதிய எம்பிக்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நாடாளுமன்ற கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.” என்று 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி தெரிவித்தார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், பதவியேற்பு விழா நடக்கிறது. முன்னதாக, பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழாக்கள் நடந்தன. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவும் எம்.பி.,க்கள் பாடுபட வேண்டும்.

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றம் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக, ஒரு கட்சிக்கு மூன்றாவது முறையாக சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைந்துள்ளது. எங்களின் நோக்கம், செயல்பாட்டுக்காக மக்கள் மூன்றாவது முறை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் வழக்கமான பாரம்பரியத்தை கடைபிடிக்க முயற்சித்தோம். ஏனென்றால், நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை அவசியம். நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, 140 கோடி மக்களின் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போம்.

நாளை ஜூன் 25. இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் விழுந்த கறையின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50வது வருடம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கும் இந்தியாவின் புதிய தலைமுறை இந்த நாளை ஒருபோதும் மறக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.

நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பையும், நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன். நாடகங்களையோ, இடையூர்களையோ விரும்பவில்லை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. இந்த 18-வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். இதன்மூலம் எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.