கள்ளச் சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் வீடு திரும்பினர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியோரில் புதுச்சேரி ஜிப்மரில் 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் வீடு திரும்பினர். சிகிச்சையில் உள்ளோரில் 4 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மூன்று பேர் அன்றே உயிரிழந்த நிலையில் 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மகேஷ் என்பவருக்கு பாதுகாவலராக வந்த செல்வம் என்பவர் மது அருந்தி உடல்நலம் குன்றி அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த சத்தியா (27), பரமசிவம் (56), முருகன் (55), சின்னசாமி (57), சாரதா (45) ஆகியோர் குணமடைந்த நிலையில் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 12 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ள நிலையில் 4 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.