கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : டிடிவி தினகரன்

கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் அருந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்த டிடிவி தினகரன் அளித்த பேட்டி: கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் 20 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 160 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் குணமடைய வேண்டுகிறேன்.

கள்ளச் சாராயம் காவல் நிலையத்துக்கு பின்புறத்திலுள்ள இடத்தில் தான் நடைபெற்றுள்ளது. இதை உளவுத் துறை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லையா.. முதல்வர் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா… இல்லை கண்டும் காணாமல் விட்டு விட்டாரா? இந்த சம்பவத்துக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த உயிரிழப்பு சம்பவம் அரசின் தோல்வியைக் காட்டுகிறது.

காவல் துறையினரை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் திமுகவினர் தான். எனவே தமிழக முதல்வர் ஏதாவது காரணங்களைக் கூறாமல், இனியாவது கள்ளச் சாராய உயிரிழப்புகள் நடைபெறாத வகையில ஆட்சியை நடத்த வேண்டும். தமிழக முதல்வரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தவறை ஒத்துக் கொள்ள வேண்டும்.

காவல் துறையும், மாவட்ட நிர்வாகம் தடையில்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கான அமைக்கப்பட்ட ஆணையத்தால் எந்த பயனும் இல்லை. ஏற்கெனவே தூத்துக்குடி சம்பவத்துக்காக அடைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல தான் இந்த ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. உண்மை தெரிய வர வேண்டும் எனில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்படுவர்.

ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகையை முதல்வர் அறிவித்திருந்தாலும், அவரது மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாகத்தான் அவரால் இங்கு வர முடியவில்லை. இந்த சம்பவத்தில் முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.