‘பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியவில்லை’ – பிரியங்கா காந்தி

பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூன் 23-ந்தேதி (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சமீபத்தில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மயான முறையில் நடத்த முடியவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- “நீட் நுழைவுத் தேர்வு – வினாத்தாள் கசிவு, நீட் முதுகலை தேர்வு – ரத்து, யு.ஜி.சி. நெட் தேர்வு – ரத்து, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு – ரத்து. நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்.

பா.ஜ.க. ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதம் மற்றும் ஆணவத்தின் காரணமாக, வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, கல்லூரிகளில் துறைகள் காணாமல் போவது ஆகியவை நமது கல்விமுறையின் அடையாளமாக மாறியுள்ளன.

பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ.க. அரசு மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்கள் பா.ஜ.க.வின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் முழு ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். எதையும் மாற்ற முடியாத மோடி, இந்த காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.