கேஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அது முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிறை சென்றார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் தரப்பு வழக்கறிஞர் இதில் வாதிட்டார். இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று இரவு 8 மணிக்கு ஜாமீன் வழங்கியது.

இந்தச் சூழலில் டெல்லி நீதிமன்றம் கேஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரியது அமலாக்கத் துறை. இது தொடர்பாக அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விடுமுறை கால நீதிபதி சுதிர் குமார் ஜெயின் விசாரித்தார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, விசாரணை நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதோடு விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் முடிவையும் அவர் விமர்சித்தார்.

இந்தச் சூழலில் அமலாக்கத் துறையின் அவசர மனுவை விசாரித்து முடிக்கும் வரையில் விசாரணை நீதிமன்றம் கேஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.