இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த பஸ்சின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 5 பயணிகள் உள்பட மொத்தம் 7 பேர் இருந்துள்ளனர். இன்று காலை 6.45 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.