தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்

கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24-ம் தேதி மாலை 3 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.