டாஸ்மாக் மதுவும் விஷச்சாராயம் தான் : கொதிக்கும் கிருஷ்ணசாமி

டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானமும் விஷச்சாராயத்திற்கு இணையானது தான் எனவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்தனர். ஒரு வருடத்திற்குள் கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்” என்றார்.

மேலும், ”அரசே மதுக்கடை நடத்தி சாராயம் விற்பதை நிறுத்தி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதிகாரத்தின் மேல்மட்டம் முதல் கீழ்நிலை வரை அனைவருக்கும் தெரிந்தே சட்டவிரோத மது விற்பனையும், கள்ளச்சாராயம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் விலகிக் கொள்ள முடியாது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல்துறையை கையில் வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரில் இயங்கி வரும் மது ஆலைகள் மூடப்பட வேண்டும். அரசு அதிகாரிகளே கட்சிக்காரர்கள் போல் செயல்படுவதை நிறுத்திவிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். பள்ளிகளில் சாதிக்கயிறுகள் அகற்றம் உள்ளிட்ட நீதியரசர் சந்துரு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள் வரவேற்கப்படக்கூடியது. இதனை உடனடியாக அரசுப்பள்ளிகளில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கிருஷ்ணசாமி கூறினார்.