கள்ளச் சாராயம் அருந்தி புதுச்சேரியில் சிகிச்சை பெறும் 16 பேருக்கும் டயாலிசிஸ் : ஜிப்மர் இயக்குநர் தகவல்

கள்ளச் சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையிலுள்ள 16 நோயாளிகளுக்கும் டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அதில் 10 பேருக்கு மூச்சு திணறல் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 16 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது அவர்களது உடல் நிலை குறித்து புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஜிப்மர் மருத்துவமனையில் விஷச் சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான முறையில் உள்ளனர். அதில் 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக அவர்கள் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 பேருமே இங்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவக் குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.