ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மோடி, அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனாதிபதிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான சேவையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும் நம்மை ஊக்குவிக்கிறது.

ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும், சிரத்தையும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது. அவரது வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமைக்காக இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாண்புமிகு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சிக்கும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்கும் திரவுபதி முர்மு காட்டும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரது ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.