வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு : 4 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை

2024ம் ஆண்டு வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 4 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இளநிலை வேளாண் பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்த தரவரிசையின் படி 33 ஆயிரத்து 973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 29 ஆயிரத்து 969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 11,447 பேர் மாணவர்கள் மற்றும் 18,522 பேர் மாணவிகள் ஆவர். கடந்த 2021ம் ஆண்டு முதல், மாணவர்கள் முழுமையான மதிப்பெண்ணான 200க்கு 200 பெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் 4 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய நான்கு மாணவிகள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

மேலும் நடப்பாண்டு 318 மாணவர்கள் 195 கட் ஆப் மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் 10,053 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 413 பேருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 22ம் தேதி பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.