நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரரால் தடுத்து நிறுத்தம் : திமுக எம்.பி அப்துல்லா புகார்

தன்னை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் தடுத்து நிறுத்தியதாக திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அப்துல்லா எழுதியுள்ள அந்தப் புகார் கடிதத்தில், “நான் நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது சிஐஎஸ்எஃப் வீரர் என்னை தடுத்து நிறுத்தி, நாடாளுமன்றத்துக்கு வந்ததன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். தமிழக அரசு மற்றும் தமிழக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்னை சிஐஎஸ்எஃப் வீரர் நடத்திய விதம் வேதனை தருகிறது. அவர்களின் நடவடிக்கை திகைக்க வைக்கிறது.

இதற்கு முன் இருந்த நாடாளுமன்ற பாதுகாப்பு சேவை வீரர்களால் இதுபோன்ற தவறான நடத்தை நடந்ததில்லை. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது. எம்.பி.க்களுக்கு அதிகாரபூர்வ ஈடுபாடுகள் ஏதும் இல்லாவிட்டாலும் அவர்களால் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். எனவே தவறு செய்த வீரர் நடவடிக்கை எடுத்து, மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்டை வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்துக்குள் செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்ததாக அப்துல்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.