“டெல்லி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் உண்ணாவிரதம்” – பிரதமருக்கு அதிஷி கடிதம்

தலைநகர் டெல்லி எதிர்கொண்டு வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் டெல்லி அமைச்சர் அதிஷி. அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டெல்லியின் தண்ணீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். நேற்று ஹரியாணா மாநிலம் 513 எம்ஜிடி நீரை திறந்து விட்டார்கள். ஆனால், அவர்கள் டெல்லிக்கு தர வேண்டிய பங்கு 613 எம்ஜிடி” என அவர் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் அங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த மே 31-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தை நாடியது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு.

அந்த மனுவில் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கோரிக்கை வைத்தது. தொடர்ந்து இமாச்சல் பிரதேசம் கூடுதல் நீரை திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும் நீர் இல்லை என்ற இமாச்சல் தெரிவித்தது. டெல்லி நிலைக்கு ஹரியாணா நீர் வழங்காதது தான் காரணம் என ஆம் ஆத்மி அரசு குற்றம் சுமத்தியது. மறுபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக டெல்லி பாஜக போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.