நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலை ஓட்டியுள்ள தென் மாநில கடற்கரையோரங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் சுமார் 61 நாட்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்தனர். கடந்த 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகு ஒன்றில் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை சுற்றிவளைத்துள்ளது. பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பார்த்திபன், சாரதி, முரளி, ராமதாஸ் ஆகிய 4 மீனவர்கள் கைது செய்ததோடு, அவர்களது படகையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறைக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையும் தன் பங்குக்கு தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது சக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.