ஒடிசாவில் அதிவேகமாக வந்து மோதிய டிராக்டர் : அப்பளம் போல நொறுங்கிய காரில் இருந்த 4 பேர் பலி

ஒடிசாவில் டிராக்டர் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள லச்சிபூர் அருகே இன்று காலை இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. கலஹண்டியில் இருந்து பவானிபட்னா நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது, லச்சிபூர் சாக் அருகே வேகமாக வந்த டிராக்டர் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இதில் கார் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியானர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் கார் முற்றிலும் சேதமானது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் குறித்த தகவலைத் திரட்ட அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு நடத்தி வருகின்றனர். டிராக்டர் மோதி காரில் இருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.