ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று ஜார்க்கண்டில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது.

முன்னதாக சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் முக்கியமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பிஎல்ஜிஏ (மக்கள் விடுதலை கொரில்லா படை) என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கே ரூ.48 லட்சம் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

சத்தீஸ்கர் என்கவுன்ட்டர் பற்றி நேற்று பஸ்தார் சரக போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், “மாவோயிஸ்டுகள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 45 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 4வது பெரிய வேட்டை இது” என்று குறிப்பிட்டிருந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், பிஜாபூர், தந்தேவாடா, சுக்மா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.