‘‘ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ – தேமுதிக

அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024ம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது.

இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கட்சியினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.