குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் தகனம்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரின் உடல் காசிமேடு மின்மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (48). கடந்த 20 ஆண்டுகளாக சரக்கு லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சிறிய டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடு செய்வதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குவைத்தில் ஓட்டுநர் வேலைக்காகச் சென்றுள்ளார்.

அந்நாட்டின் மங்காஃப் நகரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர். அதில் ராயபுரம் சிவசங்கரனும் ஒருவர்.

சிவசங்கரனுக்கு மனைவி ஹேமகுமாரி (42), மகள் ஷாத்திகா (21), மகன் தீபக் ராஜ் (17) ஆகியோர் உள்ளனர். சிவசங்கரின் உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தது. அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சாலை வழியாக சிவசங்கரின் உடல் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தது. அவரது உடல் சென்னை ராயபுரத்தில் உள்ள கார்ப்பரேஷன் காலனி பகுதியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரது மனைவி, மகள், மகன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராயபுரம் தொகுதி எம்எல்ஏ-வான ஐட்ரீம்ஸ் மூர்த்தி, பொதுமக்கள் மற்றும் சிவசங்கரின் நண்பர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து காலை 8:30 மணிக்கு சிவசங்கரின் குடும்ப வழக்கப்படி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர் 9 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அதில் ஏராளமானவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காசிமேடு மின் மயானத்தில் சிவசங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.