சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் தொடக்க விழா : பிரதமர் மோடி ஜூன் 20-ல் தமிழகம் வருகை

சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஜூன் 20-ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. அந்தவகையில், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, திருவனந்தபுரம் – காசர்கோடு, சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூர்-நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இதுகுறித்து பரிந்துரை செய்தது. பரிந்துரையின் அடிப்படையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது.

அந்தவகையில், இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கிச் சென்றார்.

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மோடி 20-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமராக பதவி ஏற்றபிறகு முதல்முறையாக மோடி தமிழகம் வருவதால் பாஜக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.