சிறப்பு பொது வழங்கல் திட்ட செயல்பாட்டில் தமிழக அரசு தோல்வி : அன்புமணி கண்டனம்

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜூன் மாதத்திலும் வழங்கப்படவில்லை.

ஏழை மக்களுக்கான அத்தியாவசியத் தேவையான பருப்பு, பாமாயில் ஆகியவை தொடர்ந்து மூன்றாவது மாதமாக வழங்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 என்ற விலையிலும், ஒரு கிலோ பாமாயில் ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.180 வரையிலும், ஒரு கிலோ பாமாயில் ரூ.125 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஏழைக் குடும்பங்களாலும், பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களாலும் வெளிச்சந்தையில் அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில், வெளிச்சந்தையை விட 5 முதல் 6 மடங்கு குறைந்த விலையில் நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படுவது அந்தக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.

ஆனால், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை பெறப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கடந்த மே 28-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அவற்றை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசின் பொதுவழங்கல் துறை அறிவித்தது. எனினும், ஜூன் மாதத்தில் முதல் இரு வாரங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மே மாதத்திற்கான துவரம் பருப்பும், பாமாயிலும் இன்று வரை வழங்கப்படவில்லை.

ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் பெரும்பான்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நிலுவையிலுள்ள பொருட்கள் வழங்கப்படுமா? என்பது தெரியாத நிலையில், மே மாதத்திற்கான பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இவை எப்போது வழங்கப்படும்? அதன் பின் ஜூன் மாதத்திற்கான பருப்பும், பாமாயிலும் எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் அரசு தெரிவிக்கும் தகவல்களுக்கும், கள நிலவரத்திற்கும் சற்றும் தொடர்பு இல்லை.சிறப்பு பொதுவழங்கல் திட்டப்படி பொருட்கள் வழங்கப்பட வேண்டிய 2.33 கோடி குடும்ப அட்டைதாரர்களில், மே 27-ஆம் தேதி வரை 82,82,702 பேருக்கு துவரம் பருப்பும், 75,87,865 பேருக்கு பாமாயிலும் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், களத்தில் இது நடக்கவில்லை. தமிழகம் முழுவதுமே நியாயவிலைக்கடைகளில் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை என்பதே மக்களின் புகாராக உள்ளது. மே மாதத்தின் தொடக்கத்திலிருந்து நியாயவிலைக்கடைகளில் பருப்பும் பாமாயிலும் வழங்கப்படாத நிலையில், அரசால் தெரிவிக்கப்படும் அளவுக்கான பருப்பும், பாமாயிலும் எங்கெங்கு, எப்போது வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

மே 27-ஆம் நாள் நிலவரப்படி நியாயவிலைக்கடைகளில் 24,96,510 கிலோ பருப்பும், 33,57,325 பாமாயிலும் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், 8,11,000 கிலோ துவரம் பருப்பும், 7,15,395 கிலோ பாமாயில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அதன்பின் எந்த நியாயவிலைக் கடைகளிலும் பருப்பும் பாமாயிலும் வழங்கப்படாத நிலையில் அவை என்னவாயின? என்பது தெரியவில்லை.

பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களின் இருப்பு குறித்தும், மே மாதம் வழங்கப்பட வேண்டிய அந்தப் பொருட்கள் ஜூன் முதல் வாரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, இன்று வரை அப்பொருட்கள் வழங்கப்படாத நிலையில், அதற்கான காரணம் என்ன? அட்டை தாரர்களுக்கு அப்பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எந்த விளக்கத்தையும் கடந்த 18 நாட்களாக வெளியிடவில்லை. இதில் ஏதோ தவறு நடக்கிறது என்பதைத் தான் தமிழக அரசின் மவுனம் காட்டுகிறது.

வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும், ஏழை மக்களுக்கு அவை கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.10,000 கோடி மக்களின் வரிப்பணம் ஒதுக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலையில், மக்களுக்கு அந்தப் பொருட்கள் இன்னும் வழங்கப்படாததன் மூலம் சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்ககப்படும் என்று தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தமிழக மக்கள் அரசின் மீது கோபம் அடைந்துள்ளனர். இதை புரிந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க தமிழக அரசின் பொதுவழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.